
துபாய், ஜூன்-15,
ஐக்கிய அரபு சிற்றரசின் துபாயில் 67 மாடிகளைக் கொண்ட Marine Pinnacle வானுயர் குடியிருப்பு கோபுரத்தில் தீப்பற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 30-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மேல் தளங்களுக்கும் கீழ் தளங்களுக்கும் மளமளவென்று பரவியது. தகவல் கிடைத்து வந்துசேர்ந்த தீயணைப்பு-மீட்புப் படை அக்கோபுரத்தில் உள்ள 764 குடியிருப்புகளிலிருந்து 3,820 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றியது.
தீயின் போது கரும்புகையும் பரவியதால் பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி, யாருக்கும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
உயரமான கட்டடம் என்பதால் சுமார் 6 மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு சனிக்கிழமைக் காலையில் தீ அணைக்கப்பட்டது. இப்பெரும் தீ காரணமாக, பிரபலமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள துபாய் மரினா நகர வீதிகளில் டிராம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அந்த வானுயரக் கட்டடத்தில் ஒரே நேர்க்கோட்டில் தீப்பிழம்புகள் மேல் எழுந்த காட்சிகள் முன்னதாக உலகம் முழுவதும் வைரலாகின.