சியோல், ஜூலை-7 -தென் கொரியாவில் ஒரே சமயத்தில் சுமார் ஆயிரம் பேர் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளானதற்கு நோரோவைரஸ் (Norovirus) கிருமியால் பாதிக்கப்பட்ட கிம்ச்சி (Kimchi) உணவே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
கிம்ச்சி என்பது கொரியாவில் மிகவும் பிரபலமான காரமான புளித்த முட்டைகோஸ் ஆகும்.
வெள்ளிக்கிழமை வரை 996 நச்சுணவுப் பாதிப்பு சம்பவங்கள் பதிவானதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்.
என்றாலும் சனிக்கிழமை அவ்வெண்ணிக்கை 1,024-கை எட்டி விட்டதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் 24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பணியாளர்களும் ஆவர்.
வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலோர் மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லாமலே குணமாகி விட்டனர்.
குறிப்பிட்ட கிம்ச்சி முத்திரையொன்று தயாரித்து அப்பள்ளிகளுக்கு விநியோகம் செய்த கிம்ச்சிகளின் தான் அக்கிருமி கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவற்றை விநியோகிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அந்நிறுவனமும் தானாகவே முன் வந்து சந்தைகளிலிருந்து அவற்றை மீட்டுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் அந்த Norovirus கிருமி பரவலுக்கானக் காரணத்தைக் கண்டறிய தொற்றுநோயியல் (Epidemiology) சோதனை நடத்தப்பட வேண்டியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
Norovirus கிருமி, கழிப்பறை கைப்பிடிகள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் பரவுவதோடு, ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்தும் தொற்றிக் கொள்ளலாம்.