
கோலாலம்பூர், செப் 25 – அண்மையில் டேவன் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் நடைபெற்ற Persatuan Seni Pentas India Kuala Lumpur ஏற்பாட்டிலான தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் ஜோகூர் மாநிலத்தின் சிகமாட் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து அன்னம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
தனபாலன் சின்னையா தலைமையில் இயங்கிவரும் கோலாலம்பூர் இந்திய மேடை நாடக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் 80 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசுக்கான 5,000 ரிங்கிட் ரொக்கம் , சுழற்கிண்ணம் ஆகியவற்றை தட்டிச் சென்றனர்.
அவர்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் பரிசுகளை வழங்கினார். அதே வேளையில் சிறந்த நாடக இயக்குநருக்கான விருதினை பத்து அன்னம் தமிழ்ப்பள்ளியே தட்டிச் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களின் அபார உழைப்பாலும் அயராத முயற்சியாலும் இந்த வெற்றியை பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி எட்டிப் பிடித்ததென தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமக்கிருஷ்ணன் தெரிவித்தார். ஹரிஸ் பிரதாப், வர்ஷகன் கார்த்திகேசு, மோனாஷினி சசிக்குமார், பவித்திரா பாண்டியன், தரணி கிருஷ்ணன் ,இராஜேஸ்வரி யோகன், , ஹிரிஹாசன் நாகலிங்கம், விலாஷினி மகேந்திரன், லயசுருதி சரவணன், சஞ்சனா சிவம் ஆகிய மாணவச்செல்வங்கள் நாடகத்திற்கு உயிர் கொடுத்தனர்.
ஆசிரியர் கார்த்திக் செல்வக்குமாரன் நாடக இயக்குநராக தம் பணியை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். மேலும் ஆசிரியர் சதீஸ்வரன் ஜெகநாதன், ஆசிரியர் திருமதி சசிபிரியா ரேணு, ஆசிரியர் கவிதா பாபு ரெட்டி ஆகியோர் ஒப்பனை, உடை அலங்காரம், ஒலிப் பதிவு என தங்களின் பங்கினைச் சிறப்புற ஆற்றினர்.
இந்தப் போட்டி கடந்த 18 ஆண்டுகளாக DEWAN BAHASA & PUSTAKA- வோடு இணைந்து நடத்தப்பட்டு வருவதாகவும் முதல் முறையாக பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் ஒருவர் கலந்தகொண்டது குறித்து தாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாக தனபாலன் சின்னையா தெரிவித்தார்.