
தைப்பிங் பள்ளியில் அதிர்ச்சி; வகுப்பறையில் ஆசிரியர் தற்கொலை
தைப்பிங், பிப்ரவரி-15,
பேராக், தைப்பிங்கில் உள்ள கம்போங் போயான் தேசிய ஆரம்பப் பள்ளியில் நேற்று காலை ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தைப்பிங் வட்டாரத்தில் பெற்றோர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான 58 வயது கனகநாதனே உயிரிழந்தவர் என அடையாளம் கூறப்பட்டது.
பள்ளி மண்டபத்தில் காலை 10 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்; ஆனால் ஒருவரை மட்டும் காணவில்லை.
பின்னர் பள்ளி முழுவதும் தேடிய போது, அந்த ஆசிரியர் 4-ஆவது மாடியில் உள்ள கடைசி வகுப்பறையில் 2 கயிறுகளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
போலீஸ், பள்ளி நிர்வாகம் என இரு தரப்புக்கும் தனித்தனியாக 2 கடிதங்களையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்; அவற்றில் தமது பிரச்சனைகள் குறித்து அவர் விவரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீஸுக்கு தகவல் அளித்தது.
போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு, சவப்பரிசோதனைக்காக தைப்பிங் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடக்கக் கட்ட விசாரணையில், தனிப்பட்ட பிரச்னை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



