
பத்து பஹாட் – ஜூன்-13 – ஜோகூர் பத்து பஹாட் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில் 3 டிரேய்லர் லாரிகள் மோதிய விபத்தில், ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் உயிரிழந்தனர்.
நேற்று காலை 8.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் மின்னியல் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரேய்லர் லாரி ஓட்டுநரான 45 வயது R. பூபாலன், அவரின் உதவியாளரான 35 வயது R. சிவசந்திரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
பூபாலன் ஓட்டிச் சென்ற லாரி, முன்னே மரக்கட்டைகளுடன் சென்ற டிரேய்லருடன் மோதியது. அந்த டிரேய்லரோ, அதன் முன்னே சென்ற எண்ணெய் லாரியுடன் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதில் பூபாலனும் சிவசந்திரனும் தத்தம் இருக்கைகளில் உடல்நசுங்கி மாண்டனர். மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற 37 வயது டிரேய்லர் ஓட்டுநர் நெஞ்சிலும் காலிலும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.
எண்ணெய் லாரி ஓட்டுநருக்கு காயமேற்படவில்லை என பத்து பஹாட் போலீஸ் கூறியது. இவ்விபத்தால் தெற்கு நொக்கிச் செல்லும் பாதையில் 10 கிலோ மீட்டருக்கும் மேல் போக்குவரத்து நிலைக்குத்தியது.