
ஜோகூர், மே 23 – ஜோகூர் மாநிலத்தில், பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில், மாணவர்கள் விடுபட்டு விடுவதைத் தவிர்க்க, ஓட்டுநர் அல்லது உதவியாளருக்கு எச்சரிக்கை விடுக்கும் அலாரம் அமைப்பு, மாநில கல்வித் துறை மற்றும் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் ஒத்துழைப்போடு பொறுத்தப்பட்டுள்ளதென்று மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தமின் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டாவில், மழலையர் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி வேனிலிருந்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதே போன்ற இன்னும் சில சம்பவங்கள் ஜோகூர் மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் மேலும் நிகழாமலிருக்க ஜோகூர் மாநில அரசு, வாகன ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல் ஆவணங்களை தயார் செய்து வருகின்றதென்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சம்பந்தப்பட்ட SOPகள் செயல்படுத்தப்படுவதோடு, விரைவில் அமலாக்கம் மேற்கொள்ளப்படும் என்று அறியப்படுகின்றது.