
கோலாலம்பூர், அக் 14 –
பிரதமர்துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தபாவின் ( Zaliha Mustafa) அரசியல் செயலாளராக திருமதி சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசிய வரலாற்றில் அரசியல் செயலாளராக இந்தியப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைமைச் செயலாளர் சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோர் முன்னிலையில் சிவமலர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அரசாங்க நிர்வாகத்தில் இணைவதற்கு முன் அவர் வழக்கறிஞராக இருந்துள்ளார். மடானி அரசாங்கத்தின் சீரமைப்பு கொள்கைகளை அமல்படுத்தும் அமைச்சருக்கு உதவும் வகையில் தனது நியமனம் இருக்கும் என்பதோடு குறிப்பாக கூட்டரசு பிரதேச மக்களின் சமுக நலன்களை வலுப்படுத்த முடியும் என சிவமலர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.