
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.
பொருட்களின் விநியோகம் நிலையாக இருக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதோடு, மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் புதிய நடவடிக்கைகளும் ஆராயப்படுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதற்காக தேசிய பாதுகாப்பு மன்றமும், தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றமும் இணைந்து இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அன்வார் சொன்னார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும், RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 என்ற மானிய நிலையில் தொடரப்படுகின்றது.
தவிர, பள்ளி பேருந்துகளுக்கான டீசல் மானியம் உள்ளிட்ட இலக்கிடப்பட்ட உதவிகளும் தொடருகின்றன.
வரும் மாதங்களில் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை பொருட்களின் விநியோகம் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், இன்றையக் கூட்டத்துக்குப் பிறகு விரைவில் மேலும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



