
பிரிக்ஃபீல்ட்ஸில் மகா சிவராத்திரி இரத ஊர்வலம்; 10,000கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
கோலாலாம்பூர், பிப்ரவரி-16,
கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள தர்ம சக்தி வேதாந்த குருகுலம் ஏற்பாட்டில், அதன் நிறுவனர் மற்றும் தலைவர் பூஜ்ய ஸ்ரீ ஷியாமளநாதன் ஐயங்கார் தலைமையில், 19-ஆவது ஆண்டாக மஹா சிவராத்திரி விழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பிரதான பூஜைகளுடன் தொடங்கிய இவ்விழாவில், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, ஏழாவது ஆண்டாக ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து சிவன் இரத ஊர்வலம் புறப்பட்டு, பிரிக்ஃபீல்ட்ஸ் சாலைகளைச் சுற்றி, குருகுலத்தில் நிறைவடைந்தது.
சிவராத்திரி நாளில் இந்த இரத ஊர்வலம் நடத்தப்படுவது, மலேசியாவிலேயே இங்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாக பூஜ்ய ஸ்ரீ ஷியாமளநாதன் ஐயங்கார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
பக்தர்கள் பலரும் தங்கள் ஆனந்த உணர்வுகளையும், இரத ஊர்வலத்தின் ஆன்மீக அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
பஜனை, நடனம், நாடகம் என பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.
சிவபெருமானுக்குரிய சிறப்பு நாளை இந்த இரத ஊர்வலம் மேலும் சிறப்பாக்கியது.



