புது டெல்லி, ஜூலை-7 – கிழக்கிந்திய மாநிலமான பீஹாரில் இடியுடன் கூடிய கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரங்களில் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்களில் பெய்த கனமழையின் போது அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அவர்களில் பலர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மழையில் நனையாமலிருக்க மரங்களின் கீழ் ஒதுங்கியவர்களும் ஆவர்.
மின்னல் தாக்கியதில் மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பீஹாரின் வடக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கியதும் மின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.