
ஷா ஆலாம், ஜூன்- 4 – பூச்சோங், Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் வாடகை வீட்டுச் செலவுக்கான உதவியை, சிலாங்கூர் மாநில அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டிலான அவ்வுதவிதொகை, ஏப்ரல் தொடங்கி 6 மாதங்களுக்கு வழங்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், குடியிருப்புகள் முழுமையாக நிறைவுப்பெறும் வரையில், பாதுகாப்பான இடத்தில் அவர்கள் இருப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு அவ்வுதவி நீட்டிக்கப்படுவதாக, வீடமைப்புத் துறைக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Borhan Aman Shah கூறினார்.
வீடுகள் பகுதி சேதமடைந்தவர்களுக்கும், பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடையும் வரை உதவித் தொடருமென்றார் அவர்.
புதிய வீடுகளில் அவர்கள் குடிபெயர்ந்த பிறகு அவ்வுதவி நிறுத்தப்படும்.
இந்த வீட்டு வாடகை உதவி மொத்தமாக 4 மில்லியன் ரிங்கிட் நிதியை உட்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி நிகழ்ந்த அந்த எரிவாயு வெடிப்பில் 81 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வேளை, 81 வீடுகள் பாதி சேதமடைந்தன.
வழங்கப்பட்ட உதவிகள் காலாவதியாவதால், மாநில அரசும் மற்ற நிறுவனங்களும் அவற்றை நீட்டிக்க வேண்டுமென, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், வாடகை வீட்டு பிரச்னைக்கு தீர்வு பிறந்துள்ளது.