Latestமலேசியா

மலேசியா மடானியின் குரலாக விளங்குவேன் – பி.கே.ஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரமணன் உறுதி

கோலாலம்பூர், மே-11 – பி.கே.ஆர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், கட்சியின் அடிப்படைக் கொள்கையுடன் மலேசியா மடானியின் குரலாகவும் விளங்க உறுதிபூண்டுளார்.

தொகுதி, மாநில மற்றும் தேசிய அளவில் அதிகாரப் பகிர்வில் அனைத்து இனத்தாரையும் அரவணைத்து கொண்டாடும் கட்சியென, பி.கே.ஆரை அவர் வருணித்தார்.

அந்த அடிப்படையில் தான் அந்த மூன்றாவது முக்கியப் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்ததாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.

உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடிமட்ட தொண்டர்களின் குரல்களை மேலிடத்திற்கு கொண்டுச் செல்வேன்; அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதிச் செய்வேன் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் உறுதியளித்தார்.

கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பின்னால் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்; இது வெறும் கட்சித் தேர்தல் அல்ல, மாறாக இதுநாள் வரை நாம் போராடிய சீர் திருத்தங்களை அமுல்படுத்துவதில் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் களமாகும் என்றார் அவர்.

4 உதவித் தலைவர் பதவிகளுக்கு, பி.கே.ஆர் கட்சியின் நடப்பு தகவல் பிரிவுத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ ரமணன் உட்பட 11 பேர் இம்முறை போட்டியிடுகின்றனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் Dr சத்திய பிரகாஷ் நடராஜன், செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!