
செத்தியூ, ஜூன்-30 – திரங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் பெசாருக்கு செல்லும் வழியில் அலையடித்து படகு கவிழ்ந்து மூவர் மரணமடைந்த சம்பவத்தில், 22 வயது படகோட்டுநர் 3 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் அவ்விளைஞரை போலீஸ் தடுத்து வைத்து விசாரிக்க, செத்தியூ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
படகு விபத்துக்குப் பிறகு சிறுநீர் பரிசோதனையில் அவ்வாடவர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் அந்நபர் மீது ஏற்கனவே 5 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு 3 முதல் 40 வயதிலான 15 பேரை ஏற்றிக் கொண்டு சந்தேக நபர் ஓட்டிச் சென்ற படகு பெரும் அலையில் சிக்கிக் கவிழ்ந்தது.
அதில் 10 வயது வெண்பனி, 40 வயது ஆறுமுகம், அவரின் 3 வயது மகள் சர்விகா ஆகிய மூவரும் கடலில் மூழ்கி மாண்டனர்.
மற்றொரு 6 வயது குழந்தை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.