
ஈப்போ, மார்ச்-18-பேராக்கில் பலகாரம் மற்றும் உணவு ஆர்டர் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையத் தகவலின்படி, இப்புதிய வகை மோசடிகளில் மக்கள் மொத்தமாக RM300,000-க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
இதுவரை குறைந்தது 7 புகார்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் கூறியது.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் உணவு அல்லது பாரம்பரிய பலகாரங்களை ஆர்டர் செய்வதாகக் கூறி, விற்பனையாளர்களை நம்ப வைக்கின்றனர்.
பின்னர், சம்பந்தப்பட்ட வணிகங்கள் தயாரிக்காத பலகாரங்களாக பார்த்து, கூடுதலாக ஆர்டர் செய்கின்றனர்.
வெளியிலிருந்து அப்பொருட்களை வாங்குமாறு வற்புறுத்துவதோடு, ‘இன்னொரு வணிகரின்’ கைப்பேசி எண் எனக் கூறி சில தொடர்பு எண்களையும் கொடுக்கின்றனர்.
கூடவே, போலியான இரசீது அல்லது பணம் செலுத்தியதாகக் காட்டும் screenshot-களை அனுப்பி விடுவதால், விற்பனையாளர்களுக்கு சந்தேகம் வருவதில்லை.
கொடுக்கப்பட்ட கைப்பேசி எண்களைத் தொடர்புகொண்டு பேசும்போது, பலகாரங்களைத் தருவிக்க அந்த பக்கத்தில் ஒப்புக்கொள்ளும் ‘நபர்கள்’ முன்பணம் கேட்கின்றனர்.
சில கடைக்காரர்கள் முன்பணம் செலுத்தி விட்டு, தொடர்புகொண்டால் மறுமுனையில் ஆட்கள் மாயமாகி விடுகின்றனர்.
அப்போது தான், தாங்கள் மோசடிக்கு ஆளாகியுள்ளதை அவர்கள் உணருகின்றனர்.
எனவே, பொது மக்கள், குறிப்பாக சிறு தொழில்முனைவோர், முன்பணம் எதனையும் உறுதிச் செய்யாமல் பெரிய ஆர்டர்களை ஏற்க வேண்டாம் என்றும், சந்தேகமான பரிவர்த்தனைகளை உடனடியாக போலீஸில் புகாரளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



