
சுபாங் ஜெயா, மே-26 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் பொறாமையினால் கடந்த வாரம் ஓர் ஆடவர் வெட்டுக் குத்துக்கு ஆளான சம்பவத்தில், ஒரு பெண்ணின் முன்னாள் கணவர் உட்பட 3 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
மூவரும் Jalan USJ 9-னில் நேற்று பிற்பகலில் கைதானதாக, சுபாங் ஜெயா போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடெண்டன்ட் மொஹமட் ஃபைருஸ் கூறினார்.
மூவருக்குமே பழையக் குற்றப்பதிவுகள் இருக்கும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதை விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்காக இன்று முதல் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என ஃபைருஸ் சொன்னார்.
வியாழக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நிகழ்ந்த சம்பவத்தில், தனது காதலர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு கத்தியால் வெட்டப்பட்டதாக உள்ளுர் பெண்ணிடமிருந்து போலீஸுக்கு புகார் கிடைத்தது.
அப்பெண்ணின் முன்னாள் கணவரும் இதர 2 உள்ளூர் ஆடவர்களும் சேர்ந்துகொண்டு, 47 வயது காதலரை சரமாரியாகத் தாக்கியதோடு தலையிலும் முதுகிலும் கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.