
மதுபோதையா? கவனக்குறைவா? அடுத்தடுத்து சாலையில் சாம்பலாகும் உயிர்கள்: என்ன தீர்வு?
கோலாலாம்பூர், பிப்ரவரி-16,
பஹாங், தெமர்லோவில் பின்னால் வந்த ஓட்டுநரின் கவனக் குறைவால், ஓர் இந்தியத் தம்பதியின் உயிர் பறிபோயுள்ளது.
கார் தீப்பற்றி எரிந்து மதியழகன், ஷர்மிளா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாலைகளில் அப்பாவி மக்கள் இப்படி உயிரிழப்பது முதல் முறையல்ல; அண்மைய வாரங்களில் இது இரண்டாவது சம்பவமாகும்.
கடந்த வாரம் பாட்டி, அம்மா, பேத்தி என 3 தலைமுறையைச் சேர்ந்த மூவர் இதே போல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரு வாரத்தில் இரண்டு துயரங்கள்… ஆனால் ஒரே காரணம்!
ஓன்று கவனக்குறைவான ஓட்டுதல்… அல்லது மதுபோதையில் ஓட்டுதல்.
இப்படி எத்தனை குடும்பங்கள் அழிந்த பிறகுதான் நாம் விழிக்க போகிறோம் என்ற கேள்வி மனதை இரணமாக்குகிறது.
ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்த பிறகே, “சட்டத்தை கடுமையாக்க வேண்டும்” என நாம் குரல் கொடுக்கிறோம்…
ஆனால்…உயிர் போன பின் கடுமை எதற்கு?
Briged MIC தலைவர் அண்ட்ரூ டேவிட், இந்த சம்பவத்தை _“மக்கள் பாதுகாப்புக்கான தேசிய அவசர நிலை” என அறிக்கை வெளியிட்டுள்ளதோடு “யாரை குற்றம் சொல்வது?”
எனும் கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
கவனக்குறைவான ஓட்டுநரா? மதுபோதையில் ஓட்டி வந்தவரின் பொறுப்பின்மையா? சட்டத்தின் பலவீனமா? அமுலாக்கத்தில் மந்தமா? என்பதே அவை.
சூட்டோடு சூடாக, அவசரமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார்.
மதுபோதையில் வாகனமோட்டினால் நீண்டகால கட்டாய சிறைத் தண்டனை, போகிறப் போக்கில் செலுத்து விட முடியாத அளவுக்கான உயர்ந்த அபராதங்கள், மரண விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு வாகனமோட்டும் உரிமத்தை நிரந்தரமாக இரத்துச் செய்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
அதோடு, மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு அனுசரனைக் காட்டக் கூடாது; போக்குவரத்து சட்டங்களை அவசரமாக மறுசீரமைக்க வேண்டும், பேரளவிலான சாலைத் தடுப்புச் சோதனை, சுவாச சோதனை போன்றவற்றையும் அமுல்படுத்த அண்ட்ரூ பரிந்துரைத்துள்ளார்.
இனியும் இதுபோன்று உயிர்கள் பறிபோகாமல் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?….. என்ற கேள்வியை, அரசாங்கம், அதிகாரத் தரப்பு, அமுலாக்க நிறுவனங்கள், மக்களிடத்தில் நாமும் முன் வைக்கிறோம்….



