
கோத்தா பாரு, ஜூன்-20 – மலேசியச் சந்தைக்காகக் கடத்தப்படவிருந்த, சுமார் 1.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 500 கிலோ கிராம் ‘ஷாபு’ (Syabu) போதைப்பொருளை, தாய்லாந்து நாராத்திவாட்டில் அந்நாட்டு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஒரு ஒதுக்குப்புறமான மாட்டுப் பண்ணையில் ஜூன் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்குள்ள மாட்டுத் தொழுவத்திற்குள் மிக இரகசியமாக 25 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஷாபு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடக்கக் கட்ட விசாரணையில், பில்லியன் கணக்கிலான இந்த போதைப்பொருள் கையிருப்பு மலேசியாவின் உள்ளூர் சந்தைகளில் விநியோகம் செய்வதற்காகவே அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் கும்பலின் தற்காலிகப் பொறுப்பாளர்களாகவும், போதைப்பொருள் காவலாளிகளாகவும் செயல்பட்ட சில சந்தேக நபர்களை தாய்லாந்து போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இந்த பயங்கர கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய நபரர்கள் யார் மற்றும் இந்த போதைப்பொருள் எந்த அனைத்துலகப் பாதைகள் வழியாக எல்லையைக் கடக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.



