
பூச்சோங், மே-11 – பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் பலர், சேதமடைந்த வீடுகள் மற்றும் வாகனங்களுக்கான காப்புறுதி பாதுகாப்பு இழப்பீட்டைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தீ விபத்தில் 8 மணி நேரங்களுக்கும் மேலாக மோசமான அனலில் சிக்கி வாகனங்களுக்கும், வீடுகளுக்கும் மிக மிகக் குறைந்த அளவிலேயே காப்புறுதி நிறுவனங்கள் இழப்பீட்டை அங்கீகரித்துள்ளன.
காப்புறுதி நிறுவனங்களின் மதிப்பீட்டாளர்கள் வெறுமனே வெளியில் இருந்து மதிப்பீடு செய்து விட்டால் போதுமா? வீடுகள் மற்றும் வாகனங்களின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதாரங்களை யார் கணக்கில் கொள்வது என, குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காப்புறுதி நிறுவனங்களின் இச்செயல் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, புத்ரா ஹைய்ட்ஸ் தோபாஸ் குடியிருப்பாளர் சங்கத்தின் செயலாளர் லாவ் செங் சியூ (Lau Cheng Chew) தெரிவித்தார்.
நேற்று அப்பகுதியில் குடியிருப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அவர்களின் ஆதங்கம் வெளிப்பட்டது.
தாமான் புத்ரா ஹார்மோனியில் நடைபெற்ற அந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட 65 குடியிருப்பாளர்களும் அவர்களின் பிரதிந்திகளும் கலந்துகொண்டனர்.
இவ்வேளையில், ஏப்ரல் 1-ஆம் தேதி ஏற்பட்ட அவ்விபத்தில் காயமடைந்த சுமார் 30 குடியிருப்பாளர்கள், தொடர் சிகிச்சைக் கட்டணம் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் கட்டணத்தால் மன அழுத்தத்திலும் கவலையிலும் உள்ளனர்.
ஏப்ரல் 20 வரைக்குமான தகவலின் படி, மொத்த சிகிச்சைக் கட்டணம் 2.7 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது; இது அவர்களின் காப்புறுதி பாதுகாப்பு வரம்பை குறைத்து, வரும் காலத்தில் மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளின் போது சிரமத்தை ஏற்படுத்தி விடுமோ என கவலையடைந்துள்ளனர்.
இன்னும் சில குடியிருப்பாளர்களுக்கு வாடகை உதவியான 2,000 ரிங்கிட் கிடைக்கவில்லை; இதனை அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், விரைவிலேயே சம்பந்தப்பட்ட தரப்பின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்படுமென்றும் லாவ் சொன்னார்.
இதனிடையே மற்றொரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் பேசிய வழக்குறைஞர் ஒருவர், அச்சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு எதிராக கூட்டாக வழக்குத் தொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சொன்னார்.