மின்சார சோற்றுப் பானை விபத்து: 5 மாதக் குழந்தைக்குக் கடுமையான தீக்காயம்

பிந்துலு, மே-16,
சரவாக், பிந்துலுவில் பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, கவிழ்ந்த rice cooker மின்சார சோற்றுப் பானையிலிருந்து கொதித்த கஞ்சி மற்றும் சுடுதண்ணீர் உடம்பில் கொட்டியதில், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மே எட்டாம் தேதி Sungai Plan பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தாய் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ‘வாக்கர்’ வண்டியில் இருந்த Mohammad Firas Aisy என்ற அக்குழந்தை, அவருக்குத் தெரியாமல் சமையலறைக்கு வந்து, தொங்கிக்கொண்டிருந்த மின்சாரப் பானையின் கம்பியை இழுத்ததாகக் கூறப்படுகிறது.
நெஞ்சு, தொடை, இடது கால் மற்றும் முகம் என உடலின் முன்பகுதி முழுவதும் கடுமையான தீக்காயங்களுடன் அக்குழந்தை Nyabau மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அக்குழந்தைக்குத் தோல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.
தங்களின் ஐந்தாவது குழந்தைக்காகப் பெரும் வேதனையில் வாடும் வேளையில், குழந்தை விரைவில் குணமடையப் பொது மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு தந்தை Mohammad Friziny கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.



