
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில் விவாதித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், குடியுரிமை தொடர்பான சட்டப்பூர்வமான அதிகார வரம்பும் நடைமுறைகளும் உள்துறை அமைச்சின் கீழ் வருவதைச் சுட்டிக்காட்டினார்.
எனவே, FAM முதலில் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுத்த பின்னர், அதனை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் Dr Mohammed Taufiq Johari கூறுகையில், குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தனது அமைச்சு தலையிடாது என்றும், இதனை FAM மற்றும் KDN ஆகிய இரு தரப்பும் இணைந்து சுமுகமாக தீர்க்க வேண்டும் என்றும் சொன்னார்.
ஆவண முறைகேடு புகார்கள் காரணமாக இந்த 7 வீரர்களுக்கு, அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA 12 மாத கால தடையும் அபராதமும் விதித்திருந்த நிலையில், தற்போது இவர்களின் குடியுரிமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



