
குளுவாங், மே-22 – ஜோகூர், குளுவாங், கம்போங் பாலெம்பாங்கில் போலீசாரை பாராங் கத்தியால் தாக்கியக் கடும் குற்றவாளி, சுட்டுக் கொல்லப்பட்டான்.
நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், பதிவு எண் பட்டை இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த அவ்வாடவனின் நடவடிக்கைகள், ரோந்து போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து அவனை பின்தொடர்ந்த போலீஸார், செம்பனைத் தோட்டமருகே செம்மண் சாலையில் மடக்கிப் பிடித்தனர்.
பரிசோதிக்க முற்பட்ட போது, திடீரென ஆவேசமடைந்த அவ்வாடவன் கையிலிருந்த பாராங் கத்தியை எடுத்து சுழற்ற, அது போலீஸ்காரர் ஒருவரின் சட்டை முழங்கையில் பட்டது.
பின்வாங்குமாறு எச்சரிக்கப்பட்ட போதும் அவன் கேட்கவில்லை; மாறாக சரமாரியாகப் போலீஸைத் தாக்கினான்.
இதனால் தங்களையும், பொது மக்களையும் தற்காத்துக் கொள்ள வேறு வழியின்றி போலீஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
அதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அவனிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை; என்ற போதிலும் வெளிநாட்டு ஆடவன் என நம்பப்படுவதாக குளுவாங் போலீஸ் கூறியது.
தொடக்கக் கட்ட விசாரணையில், 2024-ஆம் ஆண்டிலிருந்தே அவன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அந்நபர் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் குளுவாங்கில் 5 கொள்ளைச் சம்பவங்களுக்கும், கோத்தா திங்கியில் ஒரு சம்பவத்திற்கும் தீர்வுக் காணப்பட்டுள்ளதாக போலீஸ் கூறியது.