
மூவார், ஜூன்-29-ஜோகூர், மூவாரில் உள்ள MRSM கல்லூரியின் தங்கும் விடுதியில் 14 வயது மாணவர் ஒருவரை கொடூரமாக பகடிவதை செய்த குற்றத்திற்காக 17 வயதுடைய 6 மூத்த மாணவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின்படி, கடந்த மே மாதம் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மூத்த மாணவர்கள் தன்னை நெஞ்சில் குத்தியதாகவும், தலையில் தாக்கியதால் கண்கள் சுற்றிலும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மேலும் தங்களிடம் பணத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரமான சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளான அந்த 14 வயது மாணவர், படிப்பை பாதியிலேயே நிறுத்தி பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 6 மாணவர்களையும் மூவார் மற்றும் மலாக்கா, அலோர் காஜாவில் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கும் முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றும், அவர்கள் தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி காப்பாளரின் அலட்சியம் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



