
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது பெரிதும் வரவேற்கக்கூடியதாகும்.
அவரின் தைரியத்தைப் பாராட்டுவதோடு நம்மின மாணவர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக நன்றியும் கூறுவதாக, DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நலச் சங்கத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோ என். சிவகுமார் கூறினார்.
ஆனால் சரவணன் ஒருவர் மட்டுமே இங்கு கேள்வி கேட்டால் போதாது.
ஏராளமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் செனட்டர்கள் இருந்தும் அனைவரும் மௌனம் காப்பது ஏமாற்றமாகவும் வேதனையாகவும் உள்ளது.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் பிரதமராக இருந்த போது நமக்கு இவ்வளவு மக்கள் பிரதிநிதிகள் இல்லை.
இருந்தாலும் வேண்டியதைக் கேட்டுப் பெற்றோம்.
இன்று இவ்வளவு பேர் இருந்தும், சரவணன் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் குரல் கொடுப்பதில்லை.
இது மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம்; பார்க்கப் போனால் இன – மத பேதமின்றி அனைத்து தலைவர்களும் இதில் குரல் கொடுக்க கேண்டுமென டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்த முழு விவரங்களை வெளியிடுமாறு அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்கிற்கு சரவணன் முன்னதாகக் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஏராளமான இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ம.இ.காவுக்கு புகார்கள் கிடைத்து வருவதாக சரவணன் அதில் குறிப்பிட்டிருந்தார்.