
ரவாங், செப்டம்பர் 15 – ரவாங்கிலுள்ள பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் பிரபல வழக்கறிஞர் முகமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லாவின் வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியது. ஹனிஃப், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உட்பட நால்வரும் உயிர் தப்பிய நிலையில் ஹனிஃப்புக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மாடி வரவேற்பறையில் தீப்பற்றியதை அவரது மகள் முதலில் கவனித்துள்ளார். தீயை அணைக்க முயன்ற ஹனிஃப், புகையும் வெப்பமும் அதிகரித்ததால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 நிமிடங்களில் வந்தபோதும், வீட்டின் பெரும்பாலான பொருட்கள் ஏற்கனவே எரிந்து நாசமாகியிருந்தன.
1998ஆம் ஆண்டு முதல் வசித்து வந்த இந்த வீட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வந்த ஹனிஃப்பின் கையெழுத்துக் குறிப்புகள், நாட்குறிப்புகள் உள்ளிட்ட 28 ஆண்டுகால குடும்ப நினைவுகள் அழிந்தன. மேலும், குடும்பத்தின் செல்லப் பூனைகளையும் காணவில்லை.
அனைத்தையும் இழந்தாலும் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதே முக்கியம் என்றும், இழப்பை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



