Latestமலேசியா

லெஜண்டரி ரைடர்ஸ் மலேசியா கிளப் ஏற்பாட்டில் கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் விழிப்புணர்வு திட்டம்

பந்தாய் ரெமிஸ், -ஆகஸ்ட்-4 – LRMC எனப்படும் லெஜண்டரி ரைடர்ஸ் மலேசியா கிளப், கோலா சிலாங்கூரில் உள்ள பந்தாய் ரெமிஸில் ஆடிபெருக்கு விழாவுடன் இணைந்து கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு திட்டத்தையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வு, பிளாஸ்டிக் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கடலில் வீசப்படுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்தியது.

இதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு கடற்கரையையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

நேற்றைய இந்நிகழ்ச்சியில் LRMC அங்கத்தினர்கள், உள்ளூர் சமூகக் குழுக்களுடன் உலர்ந்த மாலைகளை கடலில் விடும் ஆடிபெருக்கு சடங்கில் பங்கேற்க வந்த புதுமணத் தம்பதிகளும் கலந்துகொண்டனர்.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க ஏதுவாக, தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மட்கும் மாற்று பொருட்களின் பயன்பாட்டை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஊக்குவித்தது.

இத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்த சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, மெலாவாத்தி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் திபன் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.

எதிர்கால சந்ததியினருக்காக கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதில் ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பைக் குறிக்கும் கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

மலேசியா முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கு இதுபோன்ற முயற்சிகளை ஏற்பாடு செய்வதற்கான தனது கடப்பாட்டை LRMC மறுஉறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!