
கோலாலம்பூர், மார்ச்-23-வளைகுடா வட்டாரத்தில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால், ஆசியானில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றென தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக Hormuz நீரிணை உட்பட முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசியா, அதன் உள்ளூர் எண்ணெய் தேவைகளுக்காக வெளிநாடுகளை அதிகம் சார்ந்திருப்பதால், இந்த நிலைமை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நீண்டகால இடையூறு ஏற்பட்டால், பணவீக்கம் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என ஐயுறப்படுகிறது.
இதனைச் சமாளிக்க, மாற்று எண்ணெய் வளங்களைத் தேடி, எரிசக்தி பாதுகாப்பை மலேசியா வலுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்காசிய நெருக்கடியால் எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்களுக்கான மானியம் அனைத்தும் தற்போதைக்குத் தொடரும் என அரசாங்கம் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



