
இஸ்லாமாத், மே-17 – பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டுப் பிரதமர் அதிசயமாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
நூர் கான் விமானப் படைத் தளத்தில் இந்தியா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக, மே 10-ஆம் தேதி விடியற்காலை 2.30 மணிக்கு தமக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததாக, ஷெபாஸ் ஷெரீஃப் சொன்னார்.
இந்தியா ஏவிய ஏவுகணைகளில் ஒன்று நூர் கான் விமானப்படை தளத்திலும் பிற இடங்களிலும் விழுந்ததாக, ராணுவத் தலைமைத் தளபதி சையிட் அசிம் முனிர் தொலைப்பேசியில் கூறியதாக, இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்தார்.
நூர் கான் விமானப்படை தளமானது, இஸ்லாமாபாத்துக்கும் ராவல்பிண்டிக்கும் இடையே உள்ள பாகிஸ்தானின் மிக முக்கியமான விமானப்படை தளமாகும்.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் விமான படை தளம் பெரும் சேதம் அடைந்திருந்தாலும், அதனை பாகிஸ்தான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பூசி மெழுகி வந்தது.
பாகிஸ்தானின் விமானப்படை தளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டதை துணைக்கோளப் புகைப்படங்கள் மூலம் நிரூபித்தும் அந்நாடு மௌனம் காத்து வந்தது.
தற்போது அந்நாட்டுப் பிரதமரே இந்தியாவின் தாக்குதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.