
கோலாலும்பூர், ஜூன் 14 – நேற்று காலை, ஜாலான் ஈப்போவிலிருந்து புலாத்தான் கெப்போங்கை (Bulatan Kepong) நோக்கிச் சென்ற கார் ஒன்று மோதியதில், பாதசாரி ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாமென்று கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) தலைவர் முகமட் ஜம்சுரி இசா (Mohd Zamzuri Isa) கூறியுள்ளார்.
PPR பத்து மூடாவிலிருந்து (PPR Batu Muda) 39 வயதான வங்காளதேச நபர் ஓட்டிச் சென்ற ‘நிசான் சில்ஃபி’, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ‘பத்து கெந்தோமென்’ (Batu Kentomen) திசையிலிருந்து வந்து கொண்டிருந்த 43 வயது வியட்நாமிய பெண் ஓட்டிச் சென்ற ‘டொயோட்டா கேம்ரி’ வாகனத்தின் முன்புறத்தில் மோதிய போது அவ்வழியே நடந்து வந்த பாதசாரி பரிதாபமாக தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார் என்று ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதசாரியை மோதிய ‘நிசான் சில்ஃபி’, பாலத்தின் கீழ் விழுந்து ‘கான்க்கிரீட்’ இடைவெளி மற்றும் இரும்புக் குழாயில் சிக்கிக் கொண்டதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரும்புக் குழாயில் சிக்கிய ஓட்டுநர் காயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர், மலேசிய பாதுகாப்புப் படை (APM), மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு குழு (URB) மற்றும் கோலாலம்பூர் காவல்துறையின் போக்குவரத்து பிரிவினரருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.