
போர்ட்டிக்சன், ஜூலை-24-மலேசியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய 10 விழுக்காடு இறக்குமதி வரி குறித்து அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைகளைத் தொடரவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
Tengku Datuk Seri Zafrul Abdul AZIZ மேற்கொண்ட ஆரம்பக் கட்ட முயற்சிகளைத் தொடர்ந்து, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் நடப்பு அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani தலைமையில் தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைக்கு அறிவிக்கப்பட்ட 10 விழுக்காடு இறக்குமதி வரியை ஏற்றுக் கொள்கிறோம். அதேவேளையில் அமெரிக்காவிடம் மலேசியா அவ்விஷயத்தை எழுப்பும் என பிரதமர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வரி விகிதம் குறைவாக இருப்பதால், தற்போதைக்கு நிம்மதியாக இருப்பதாகவும் போர்ட்டிக்சனில் ராணுவ அடிப்படைப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற Semarak Kenegaraan நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அன்வார் சொன்னார்.
மலேசியா உட்பட 60 வர்த்தகப் பங்காளிகளின் பொருட்கள் மீது முறையே 10 விழுக்காடு மற்றும் 12.5 விழுக்காடு என்ற புதிய வரிகளை இன்று முதல் அமல்படுத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது.
சம்பந்தப்பட்ட நாடுகள் கட்டாய உழைப்புக்கு எதிரான தடைகளைச் செயல்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், 10 விழுக்காடு அளவிலான தற்காலிக உலகளாவிய வரி விதிப்பு காலாவதியாகும் சூழலிலும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க, 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 முதல் 50 விழுக்காடு வரையிலான பரஸ்பர வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



