
கோலாலாம்பூர், ஜூன்-12 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் பதினொன்றாவது சர்வதேச யோகா தினம் 2025 சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளில் நான்காம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டு வரை பயிலும் சுமார் 40,000 மாணவர்கள் இப்பயிற்சியில் இயங்கலை வாயிலாகப் பங்கேற்கின்றனர்.
அதே சமயம் நெகிரி செம்பிலானின் சிரம்பான், போர்ட்டிக்சன் சுற்றுவட்டார தமிழ்ப்பள்ளிகளிலிருந்து சுமார் ஆயிரம் மாணவர்கள் நேரடியாகவும் இப்பயிற்சியில் பங்குபெறுகின்றனர்.
ஒரே நேரத்தில் இத்தனைப் பேர் யோகாசனப் பயிற்சிகளைச் செய்வது மலேசிய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இதன் வழி “Amazing Malaysia Book of Records” சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் ஒரு முயற்சியாகவும் இது அமையவிருக்கின்றது.
நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு மக்களுக்கு எளிய முறை குண்டலினி யோகப்பயிற்சிகளையும், காயகல்பம் உள்ளிட்ட இதர மனவளைக்கலை பயிற்சிகளையும் இந்த மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை அறக்கட்டளை வழங்கி வருகிறது.
கல்வி அமைச்சின் முழு ஆதரவோடு மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றம், இந்திய ஆயுஷ் அமைச்சு , இந்திய யோகக்கலை அமைப்பான அகில உலக சமுதாய சேவா சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இம்மாபெரும் நிகழ்ச்சி அமையவிருப்பதாக ஏற்பாட்டுக்குழு இயக்குநர் Dr அமர்ஜித் கவுர் ஜச்வந்த் சிங் கூறினார்.
லிங்கி வட்டாரத்தில் பிரமாண்டமாக அமையப்பெற்றுள்ள மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் அறிவுத் திருக்கோயிலில் இந்நிகழ்ச்சி காலை மணி 7.30 தொடங்கி சுமார் ஒருமணி நேரம் நடைபெறும்.
யோகக்கலையை அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைக்க முடியும் என மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை அறக்கட்டளையின் தேசிய தலைவர் துணைப் பேராசிரியர் ஆறுமுகம் பாலகிருஷ்ணன் கூறினார்.
மேல் விபரங்களுக்கு vsmanavalakalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 017-3361290 என்ற தொலைபேசி எண்களின் மூலம் ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.