
சேல்ட் லேக் சிட்டி, ஜூலை-16-அமெரிக்காவின் யூட்டா (Utah) மாநிலத்தில் வணிக வளாகமொன்றில் பணியாற்றி வந்த இந்திய முஸ்லீம் ஆடவர் மீது மத வெறியால் தூண்டப்பட்டதாகக் கூறப்படும் கொடூர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
48 வயதான சந்தேக நபர், தாக்குதலுக்கு முன்பு பாதிக்கப்பட்டவரிடம் அவர் முஸ்லீமா எனக் கேட்டதாகவும், பின்னர் சரமாரியாக கத்தியால் 15 தடவை குத்தியதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் உடனடியாக தலையிட்டு தாக்குதல்காரனை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதுச் செய்யப்பட்ட பின்னர், முஸ்லீம்களைக் கொல்லும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவனே வாக்குமூலம் அளித்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sohail என அடையாளம் கூறப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவருக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மத வெறியால் தூண்டப்பட்ட தாக்குதலாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தேக நபர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.



