
கோலாலம்பூர், மே-3-16-ஆது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியான BN தனித்துப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மற்ற கூட்டணிகளுடன் ஒரு புரிந்துணர்வை செய்துகொண்டு தேர்தலைச் சந்திப்பதே விவேகமாக இருக்குமென்றார் அவர்.
3 முனைப் போட்டியைத் தவிர்க்க அது அவசியம் என அவர் சொன்னார்.
தனித்துப் போட்டியிட்டாலும் பாரிசான் அனைத்து 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாது; அதற்கு அவசியமும் இல்லை.
எனவே, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளாகப் பார்த்து பாரிசான் போட்டியிடும் என, துணைப் பிரதமருமான ஷாஹிட் தெரிவித்தார்.
இவ்வேளையில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்து விட முடியாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆனால், எந்தவோர் ஒத்துழைப்பும் இஸ்லாம், ஆட்சியாளர்கள், மலாய்க்காரர்கள், மலாய் மொழியின் அந்தஸ்து போன்றவற்றில் கொள்கை சமரசத்துக்கு இடமில்லை என, அம்னோவின் 80-ஆம் ஆண்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஷாஹிட் பேசினார்.
2022 பொதுத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டதிலிருந்து, பக்காத்தான் ஹராப்பானுடான் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து பாரிசான் மத்திய அரசில் பங்கேற்று வருகிறது.



