
ஜாசின், ஏப் 21 – மலாக்கா, மெர்லிமாவில் , திருமண ஏற்பாடு வசதிகளை செய்துதரும் நிறுவனத்தின் 27 வயது பெண் ஊழியர் ஒருவர், குறைந்தது எட்டு வருங்காலத் தம்பதிகளிடமிருந்து பெற்ற 17,800- ரிங்கிட் முன்பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுவது தொடர்பில் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் முன் பணம் செலுத்துவதற்குப் பதிலாகத் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு திருமணம் செய்யவிருக்கும் தம்பதியரை அந்த சந்தேகப் பேர்வழி நம்பவைத்து ஏமாற்றியுள்ளதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மலாக்கா தெங்காவில் வேறு புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த சந்தேக நபர் மேலும் கூடுதலான தொகையை மோசடி செய்திருக்கலாம் என மாவட்ட போலீஸ் தலைவர் லீ ரோபர்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மலாக்கா வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் மோசடி குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.



