
புத்ராஜெயா, ஆகஸ்ட்-24-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தவிருக்கிறார். சுதந்திர உணர்வை உள்வாங்குவது, மலேசியர்களிடையே தேசபக்தியை வளர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மடானி அரசாங்கத்தின் இலட்சியங்களையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த உரை அமையவிருக்கிறது.
தேசிய ஒற்றுமை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள அந்நிகழ்வு ஆகஸ்ட் 30 ம் தேதி Dataran Merdekaவில் நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணி முதலே அனிமேஷன் இசை நிகழ்ச்சி, உலக ஒளித் திருவிழா, Gema Perpaduan Malaysia Madani கலாச்சார நிகழ்ச்சி, சிறப்பு சுதந்திர தின இசை நிகழ்ச்சி மற்றும் முன்னணி உள்ளூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.
இதனிடையே நாடு நல்வாழ்வு அடைய வலுவான ஒற்றுமை தேவை என தேசிய ஒற்றுமை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்துள்ளார். ‘மதம், கலாச்சாரம், மொழி பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் நிறைந்த மலேசியாவில், நாம் புரிதல், மரியாதை, ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் கொண்டாட்டம் ஆகிய மனப்பான்மைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எனவே Dataran Merdekaவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமரின் உரையைக் கேட்குமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த சிறப்பு உரை இரவு 9.30 மணி முதல் TV1 மற்றும் RTMKlik செயலி ஆகியவற்றிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். அந்நிகழ்ச்சியில் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Malaysia Madani: Kesejahteraan Dinikmati என்ற கருப்பொருளில் இவ்வாண்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.



