
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன.
அக்குடும்பத்தார், முறையாக விண்ணப்பித்து, கடுமையான பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர் என, வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ கூறினார்.
ஏராளமானோர் விண்ணப்பம் செய்தாலும், நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்து, வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் அவர்களுக்கு இந்த வாடகை வீடுகள் கிடைத்துள்ளன.
முறையான குடியிருப்பின்றி வாழ்க்கையில் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து விட்டனர்; ஆக, இந்த வாடகை வீடு, அவர்களின் வாழ்வில் ஒரு சிறிய ஒளியேற்றும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அக்குடும்பத்தாருக்கு வீட்டு சாவிகளை வழங்கிய பிறகு அவர் அதனைத் தெரிவித்தார்.
அவர்களுக்கு வீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சியென்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் அவர்கள் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றும் சுந்தரராஜூ நினைவுறுத்தினார்.
அம்மூன்று குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கான 6 மாத வாடகை முன்பணத்தை ஏற்றுக் கொண்ட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனுக்கும் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ நன்றித் தெரிவித்துக் கொண்டார்.