
புது டெல்லி, ஜூலை-26-இந்தியாவில் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் வாரக்கணக்கில் நீடித்த மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, அந்நாட்டுக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒருவழியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 37 நாள் போராட்டத்தைத் தொடர்ந்து, தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் அவரது ராஜினாமாவை அதிபர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பயனீட்டாளர் விவகாரங்கள் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பொதுத் தேர்வு முறை மீதான மாணவர்களின் 5 அம்ச சீர்திருத்தப் பரிந்துரையை பரிசீலிப்பது ஆகியவை அக்கோரிக்கைகளில் அடங்கும்.
தலைநகர் புது டெல்லி தொடங்கி இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த Gen Z தலைமுறை மாணவர் போராட்டம் உலகளவில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தங்களின் போராட்டம் வெற்றிப் பெற்றதால் மாணவர்கள் சாலைகளில் ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமூக வலைத்தளவாசிகளும் _Gen Z தலைமுறை சாதித்து விட்டது_ என போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் சமூகத்தைப் பாராட்டி வருகின்றனர்.



