
கோலாலம்பூர், ஜூலை-6-18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஈபிஎஃப் உறுப்பினர்களில் 3.04 மில்லியன் பேர், 60 வயதில் இருக்க வேண்டிய அடிப்படை சேமிப்பு இலக்கான 390,000 ரிங்கிட்டை எட்டியுள்ளனர்.
அவர்கள் 7.94 மில்லியன் பேரில் 38.3 விழுக்காட்டினர். இவ்வெண்ணிக்கை இவ்வாண்டு மே 31 ஆம் தேதி வரைக்குமான நிலவரம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 7.74 மில்லியன் உறுப்பினர்களில் 2.71 மில்லியன் பேர் மட்டுமே இந்த இலக்கை அடைந்திருந்ததாக நிதித்துறை துணை அமைச்சர் Liew Chin Tong தெரிவித்தார்.
ஓய்வுக் கால சேமிப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய பங்களிப்புக்கான ஊக்கத் தொகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட விரிவான நிதிசார் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஈபிஎஃப்பும் அரசாங்கமும் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அவர் மக்களவையில் கூறினார்.
வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்புக்கு மத்தியில், மலேசியர்களிடம் போதுமான அந்திம கால சேமிப்பு இருப்பதை உறுதிச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.
இவ்வேளையில், கோவிட்-19 காலக் கட்டத்தில் பணத்தை எடுக்க வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் சுமார் 6.1 மில்லியன் EPF உறுப்பினர்களின் சேமிப்பு பத்தாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக உள்ளது குறித்து Port Dickson எம்பி அமினுடின் ஹருன்கவலை தெரிவித்தார்.
அதன் தொடர்பில் பேசிய, Liew, ய்வுக் கால சேமிப்பு இடைவெளியைச் சரிசெய்யும் நோக்கில், ‘மடானி பொருளாதாரம்’ கட்டமைப்பின் கீழ் ஊதியம் மற்றும் குடும்ப வருமானத்தை உயர்த்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக விளக்கினார்.
இது ஒரு முக்கியக் கொள்கை நோக்கமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் வருமானம் அதிகரித்தால், இச்சூழ்நிலையை இன்னும் திறம்படக் கையாள முடியும் என்றாரவர்.



