
புத்ராஜெயா, மே-20 – சர்ச்சையாகியுள்ள ‘மை கியோஸ்க்’ விற்பனைக் கூடாரங்களின் செலவு குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையமான MACC உள்ளிட்ட எந்தவோர் அதிகாரத் தரப்பும் விசாரிக்கலாம்.
அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சரான ங்கா கோர் மிங் கூறியுள்ளார்.
அமைச்சு மிகவும் வெளிப்படையாக செயல்படுவதாக அவர் சொன்னார்.
ஆனால், அதே சமயம் அவ்விஷயத்தில் அவதூறு பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குறிப்பாக சமூக ஊடகங்களில் ‘மை கியோஸ்க்’ திட்டம் குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதை ஏற்க முடியாது.
சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக போலீஸிலும் மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யிலும் புகார் செய்யப்படும்.
புகாருக்கான வீடியோ ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த ‘மை கியோஸ்க்’ முன்னெடுப்பு எதற்கும் உதவாத ‘வெள்ளை யானைத்’ திட்டம் என தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
அதனை முற்றாக மறுத்த அமைச்சர் ங்கா கோர் மிங், உண்மையில் குறைந்த விலையில் சாலையோர வியாபாரிகளுக்கு போதிய வியாபார வசதிகளை ஏற்படுத்தித் தரும் மக்கள் நலத் திட்டம் அதுவென்றார்.
‘மை கியோஸ்க் 2.0’ திட்டத்தின் கீழ் கூடாரங்களின் விலை தலா 25,000 ரிங்கிட்டை எட்டியிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.
ஆனால், காலத்திற்கு ஏற்ப கூடாரங்களின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை பலர் புரிந்துக்கொள்ளவில்லை என அவர் சொன்னார்.
இலக்கு வைக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாக, இதுவரை 156 ஊராட்சி மன்றங்களுக்கு இந்த ‘மை கியோஸ்க்’ கூடாரங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.