
குய்லின், ஏப்ரல்-21-பாம்புகளைக் கண்டாலே நம்மில் அனைவரும் அலறி அடித்தும் ஓடும் சூழலில், 60,000-க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளைத் தனது பண்ணையில் வளர்த்து, அதன் மூலம் ஆண்டுக்கு அரை மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
Guangxi மாகாணத்தைச் சேர்ந்த 30 வயது Qin, பல்கலைக் கழகப் படிப்பு முடிந்த இரண்டு ஆண்டுகளிலேயே, சொந்த ஊருக்குத் திரும்பி, குடும்ப பாம்புப் பண்ணையை தனது நிர்வாகத்தில் எடுத்துக் கொண்டார்.
Qin, தற்போது 60,000-க்கும் மேற்பட்ட ஊர்வனங்களைப் பராமரித்து வருகிறார்; அவற்றில், 50,000-க்கும் மேற்பட்டவை pit viper இனத்தைச் சேர்ந்த ‘five-step’ பாம்புகள் ஆகும்; சுமார் 10,000 நாகப்பாம்புகளும் உள்ளன.
‘five-step’ பாம்புகளுக்கு சிறப்பு உணவு முறைகள் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவற்றுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க வேண்டியிருக்கும்.
இதனால் இவ்வகை பாம்புகளுடன் நெருக்கமாக தொடர்பு கொள்ளும் போது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று Qin கூறுகிறார்.
இவரின் பண்ணை, உலர்த்தப்பட்ட பாம்புகள், பித்தப்பை மற்றும் பாம்பு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களை வழங்குகிறது.
பாம்பு விஷத்தின் விலை அதன் தரத்தைப் பொறுத்து ஒரு கிராமுக்கு 23 ரிங்கிட் முதல் 115 ரிங்கிட் வரை விற்பனையாகிறது; பாம்பு இறைச்சியோ தலா 115 ரிங்கிட் முதல் 174 ரிங்கிட் வரையிலும், பெரிய வகை பாம்புகள் 580 ரிங்கிட் வரையிலும் விற்கப்படுகின்றன.
ஆபத்தான தொழில் என்றாலும், முறையான பயிற்சியும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்தால் இதில் வெற்றி பெறலாம் என்கிறார் Qin…



