
கோலாலாம்பூர், ஏப்ரல்-25 – மலேசிய இந்தியச் சமூகத்தின் திறன் மேம்பாட்டுக்காக மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, ‘வெற்றி மடானி’ (Vetri MADANI) எனும் புதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கோலாலாம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் இன்று நடைபெற்ற இவ்விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.


ஏற்கனவே 2024 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 8,719 இந்தியர்கள் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் அமைகிறது.
இது முந்தைய மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்பான MISI திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், நாடு முழுவதும் 2,000 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரமணன் சொன்னார்.
குறிப்பாக, AI, இணையப் பாதுகாப்பு மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்காலத் தேவை சார்ந்த துறைகளில் இப்பயிற்சிகள் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்கள் என இரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற்று, தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இத்திட்டம் ஒரு பாலமாக அமையும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.



