பெட்டாலிங் ஜெயா, ஜூன்-1 – கூட்டரசு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் தீப்பற்றி எரிந்த ராட்சத மின்னியல் விளம்பரப் பலகையைப் பராமரிக்கும் நிறுவனம், பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தின் பெர்மிட் மற்றும் உரிமத்தைப் பெற்றிருக்கிறது.
PJ மாநகர மேயர் Datuk Mohamad Zahri Samingon அதனை உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும், சம்பவத்தின் போது அந்த billboard-டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள் என்றார் அவர்.
முறையான லைசன்ஸ் பெற்ற பராமரிப்பு நிறுவனம் என்பதால், அச்சம்பவம் எதிர்பாராமல் நடந்த ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
அந்த billboard பலகை ஐந்தாண்டுகள் பழைமையாகி விட்டதால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு புதியப் பலகையைப் பொருத்தும் போது அத்தீ ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் என்ன நடந்திருக்கலாம் என்பது குறித்து, தீயணைப்பு மீட்புத் துறையின் அறிக்கைக்குக் காத்திருப்போம் என Datuk Mohamad Zahri கூறினார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான பாதை மீண்டும் திறக்கப்பட ஏதுவாக, சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று காலை துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கூட்டரசு நெடுஞ்சாலையின் 33.8-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த விளம்பர பலகை தீப்பற்றியதில், அதன் மேல் பகுதியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 9 பணியாளர்கள் பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டனர்.
எனினும் நல்ல வேளையாக அவர்களுக்கு சிராய்ப்புக் காயங்களே ஏற்பட்டன.
உயிர் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.