குழுவாங், ஜூன்-1 – ஜொகூர், குளுவாங்கில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 4 யானைகளின் சடலங்களை தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்குப் பாதுகாப்புத் துறையான PERHILITAN சவப்பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளது.
அந்த 4 யானைகளும் கஹாங், கம்போங் ஸ்ரீ தீமோரில் உள்ள விவசாய நிலமொன்றில் இன்று மடிந்து கிடந்தன.
யானைகள் மடிந்ததற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய சவப்பரிசோதனை அவசியம் என, ஜொகூர் PERHILITAN இயக்குநர் Aminuddin Amin கூறினார்.
சவப்பரிசோதனைக்கும் இராசயண சோதனைக்கும் 2-3 வாரங்கள் பிடிக்கலாம் என்றார் அவர்.
எனவே அவை விஷம் வைத்து தான் கொல்லப்பட்டன என்பதை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என அவர் சொன்னார்.
எது எப்படி இருந்தாலும், காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தால், அவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் கிராம மக்கள் ஈடுபடக் கூடாது; உடலுக்கு ஒவ்வாதவற்றை தின்றால் யானைகள் ஆவேசமடைந்து தாக்கலாம், இது சுற்றுப்புற மக்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என அவர் எச்சரித்தார்.
விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 4 யானைகள் செத்துக் கிடக்கும் காணொலி முன்னதாக வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.