உலு சிலாங்கூர், ஜூன்-3 – PLUS நெடுஞ்சாலையின் தஞ்சோங் மாலிம் R&R பகுதியில் போலீசுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், உள்ளூர் ஆடவர்களான இருவரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
சந்தேகத்திற்கிடமான புரோட்டோன் வாஜா காரை போலிசார் பின் தொடர்ந்துச் சென்ற போது, சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
காரில் இருந்தவர்கள், தாங்கள் பின் தொடரப்படுவதை உணர்ந்து PLUS நெடுஞ்சாலையின் வடக்கே போகும் பாதையில் நுழைந்து தப்பியோட முயன்றனர்.
விடாது துரத்திச் சென்ற போலீஸ், தஞ்சோங் மாலிம் R&R-ரில் அக்காரை சுற்றி வளைத்து நிறுத்திய போது, அவர்கள் போலீசாரை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியதில், காரில் இருந்த இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
கொல்லப்பட்ட இருவரில் ஒருவன் ஏற்கனவே 23 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதோடு, 6 வழக்குகள் தொடர்பில் போலீசால் தேடப்பட்டு வந்தவன் ஆவான்.
இன்னொருவன் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.