சென்னை, ஜூன் 20 – இந்தியாவில் தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 17பேர் இறந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் பலர் இறந்ததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த சாரயத்தை குடித்தவர்களில் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்று வருவதால் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் MS பிரசாந்த் ( Prasanth) தெரிவித்தார். அந்த மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று கண்டபின் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே கள்ளச்சாரயம் குடித்து பலர் உயிரிழந்தது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமது அதிர்ச்சி மற்றும் கவலையை தெரிவித்திருக்கிறார். இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதோடு இச்சம்பவத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என X தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.