பாசீர் கூடாங், ஜூன்-20, ஜொகூரில், வரி செலுத்தாத மதுபானங்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்ட சோதனையின் போது, 18,000 ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுக்க முயன்ற முதலாளி வசமாக சிக்கினார்.
பாசீர் கூடாங், Taman Air Biru-வில் உள்ள வீட்டொன்றில் நேற்று மாலை அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் கைதான 48 வயது வங்காளதேசியை விடுவிப்பதற்காக, அங்கேயே வைத்து போலீசுக்கு லஞ்சம் கொடுக்க 51 வயது அந்த முதலாளி பல தடவை முயற்சித்துள்ளார்.
பல முறை எச்சரித்தும் கேட்காமல் லஞ்சம் கொடுப்பதிலேயே அவ்வாடவர் ஆர்வமாக இருந்துள்ளார்.
இதனால் பொறுமையிழந்த போலீஸ் அந்த உள்ளூர் ஆடவரைக் கைதுச் செய்ததாக, ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent மொஹமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) சொன்னார்.
மதுபான கிடங்கின் பாதுகாவலரான அந்த வங்காளதேசத் தொழிலாளியும் சுங்கத் துறை சட்டத்தின் கீழ் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அச்சோதனையின் போது, 67,791 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு மதுபானங்கள் அடங்கிய 60 பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.