உலு சிலாங்கூர், ஜூலை-21 – நூர் ஃபாரா கார்த்தினி (Nur Farah Kartini) படுகொலைச் செய்யப்படுவதற்கு முன், பேராக் தஞ்சோங் மாலிமில் சந்தேக நபருக்குச் சொந்தமான மரவள்ளிக் கிழங்குத் தோட்டம் உள்ளிட்ட சில இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் இறந்துக் கிடந்த இடத்திலிருந்து 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த மரவள்ளித் தோட்டம் உள்ளது.
இறந்துப் போன பெண்மணியும் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஆடவரும் மரவள்ளித் தோட்டத்திற்கு வந்திருந்ததை, அங்கு வேலைச் செய்யும் தொழிலாளி தனது வாக்குமூலத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அஹ்மாட் ஃபைசால் தாஹ்ரிம் (Ahmad Faizal Tahrim) அத்தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.
இதையடுத்து மேலும் துப்புத் துலங்கும் பொருட்டு, மரவள்ளித் தோட்டத்தில் மேலும் சில சாட்சிகளை விசாரிப்பதோடு, ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் விசாரணைக் குழு ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
நூர் ஃபாராவை, உலு சிலாங்கூர், உலு பெர்னாம், கம்போங் ஸ்ரீ கிளேடாங் செம்பனைத் தோட்டத்திற்குக் கொண்டுச் செல்லும் முன், பேராக் தஞ்சோங் மாலிமில் சில இடங்களில் சந்தேக நபர் காரை நிறுத்தியது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
அதனையும் போலீஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அஹ்மாட் ஃபைசால் கூறினார்.
ஜூலை 10-ஆம் தேதி காணாமல் போன நூர் ஃபாரா கார்த்தினி, கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் செம்பனைத் தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரின் காதலரான 26 போலீஸ் வீரர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளார்.