கோலாலம்பூர், செப்டம்பர்-28, போலீஸ் மேற்கொண்ட பேரளவிலான சோதனை நடவடிக்கைகளால், குளோபல் இக்வான் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துப் போயிருப்பதாக நம்பப்படுகிறது.
ஏறக்குறைய அதன் அனைத்து வணிக வளாகங்களுமே சேவையை நிறுத்தியிருப்பதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.
அந்நிறுவனம் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளதால், மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது என்றார் அவர்.
விசாரணையின் ஒரு பகுதியாக குளோபல் இக்வான் நிறுவனத்துக்குச் சொந்தமான 138 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, 800,000 ரிங்கிட் நிதி, 1.87 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 22 வாகனங்கள், 14 சொத்துடமைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன் செயல்பாடுகள் முடங்கி போவதற்கு அதுவும் காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வேளையில், கைதான நபர்கள் மற்றும் உளவு நடவடிக்கைகள் வாயிலாக, அந்நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளையும் சொத்துகளையும் அடையாளம் காண்பதில் தற்போது விசாரணையில் கவனம் செலுத்தப்படுவதாக IGP சொன்னார்.