கோலாலம்பூர், டிசம்பர்-12, BWF எனப்படும் அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் உலக இறுதித் தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில், நாட்டின் லீ சி’ ஜியா (Lee Zii Jia) அணிந்திருந்த ஜெர்சியில் தேசியக் கொடி தலைக்கீழாக அச்சடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
இதையடுத்து, சீ’ ஜியாவின் நிதி ஆதரவாளரான Victor Malaysia அத்தவற்றுக்காக மலேசிய மக்களிடமும் சீ’ ஜியாவிடமும் மன்னிப்புக் கோரி வருத்தமும் தெரிவித்துள்ளது.
ஜாலூர் கெமிலாங் இந்நாட்டு மக்களின் பெருமைமிகு அடையாளமாகும்.
எனவே, அது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல; கவனக்குறைவால் தற்செயலாக நடந்தது;
இனியும் அது போன்று நடக்காதிருக்க, தங்களின் ஜெர்சிகள் அனைத்தையும் விரிவான சோதனைக்கு உட்படுத்தவும் அந்நிறுவனம் தனது X தளப் பதிவில் உறுதியளித்தது.
முன்னதாக, தைவானின் ச்சௌ தியென் ச்சென்னை (Chou Tien Chen) எதிர்த்து விளையாடிய போது, லீ சி’ ஜியா அணிந்திருந்த ஜெர்சியின் முன்புற இடப்பக்கத்தில் தலைக்கீழாக ஒட்டப்பட்டிருந்த மலேசியக் கொடி, தொலைக்காட்சி நேரலையில் தெளிவாகத் தெரிந்தது.
இதனால் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
A குழுவுக்கான அந்த முதல் ஆட்டத்தில் சீ’ ஜியா, தியென் ச்சென்னை 21-13, 21-15 என நேரடி செட்களில் தோற்கடித்தார்.