
சபாக் பெர்ணாம், மார்ச்-27- சிலாங்கூர், சபாக் பெர்ணாம், கம்போங் சுங்கை ஹாஜி டோரானியில் உள்ள எண்ணெய் நிலையமொன்றின் கழிவறைக் குழியில் ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீஸார் ஒரு குடும்ப மாது மற்றும் அவரின் மகளைக் கைதுச் செய்துள்ளனர்.
முதல் சந்தேக நபரான 41 வயது மாது கிள்ளான், மேருவில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் நேற்று முன்தினம் கைதானார்; அவரின் வாக்குமூலத்தின் உதவியோடு, துரித உணவகப் பணியாளரான 18 வயது மகள் கைதுச் செய்யப்பட்டார்.
சபாக் பெர்ணாம் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் மொஹமட் யூசோஃப் அஹ்மாட் அதனை உறுதிப்படுத்தினார்.
மகள் கர்ப்பமாக இருந்த தகவல் அவரின் தாய்க்குத் தெரியவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டு, தாயும் மகளும் மார்ச் 29 வரை 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில், எண்ணெய் நிலையக் கழிவறைக் குழியில் அந்த ஆண் சிசுவின் சடலம் குப்புறக் கிடந்ததை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.