Latestமலேசியா

மலேசியர்களின் உண்மைச் சம்பள விகிதம் 3 மடங்கு சரிவு; பேங்க் நெகாரா முன்னாள் ஆளுநர் கவலை

ஷா ஆலாம், மே-4- மலேசியர்களின் உண்மைச் சம்பள விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 மடங்குக் குறைந்திருப்பதாக, பேங்க் நெகாரா முன்னாள் ஆளுநர் தான் ஸ்ரீ முஹமட் இப்ராஹிம் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக பட்டதாரிகளின் தற்போதையத் தொடக்க சம்பளம் மாதத்திற்கு 2,000 முதல் 3,000 ரிங்கிட் என்ற அளவில்தான் உள்ளது.

இதுவே 1984-ஆம் ஆண்டில், பட்டதாரிகளின் தொடக்கச் சம்பளம் 1,300 ரிங்கிட்டாக இருந்தது.

நடப்பு பணவீக்க விகிதமான 5 விழுக்காட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்போதைய பட்டதாரிகளின் சம்பளம் பார்க்கப் போனால் 7,000 முதல் 8,000 ரிங்கிட்டை எட்டியிருக்க வேண்டும்.

இது, 1980-ஆம் ஆண்டுகளில் வாங்கும் சக்தியான 300 முதல் 400 ரிங்கிட்டுக்கு சமமானதாகும்; ஆக, சம்பள விகிதம் இந்த 40 ஆண்டுகளில் 3 மடங்கு சரிந்திருப்பதே நிதர்சனம் என அவர் சொன்னார்.

மலேசியர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமான வட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பது இன்று நேற்று வந்த பிரச்னையல்ல; காலங்காலமாகவே நீடிப்பது தான்.

அந்நியத் தொழிலாளர்களையே அதிகம் சார்ந்திருப்பது, உயர் ஊதிய மற்றும் தரமான வேலைகளை ஏற்படுத்தத் தவறியது, கல்வி முறையில் காணப்படும் பலவீனங்கள் உள்ளிட்டவை அதற்குக் காரணம் என்றார் அவர்.

நாட்டின் கல்வி முறையும் பொருளாதார அமைப்பும் மறுசீரமைக்கப்படவில்லை என்றால், நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் திறன் தேர்ச்சிக் குறைந்த உடல் உழைப்புத் தொழிலாளிகளாகத்தான் வேலை செய்ய முடியுமென அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!